குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, July 25, 2008

நான் வேலைக்குப் போகலாமா?????

அண்மையில் படித்த இரண்டு பதிவுகளின் பாதிப்பே இந்தப் பதிவு.

ஒன்று இந்த வார நட்சத்திரப் பதிவர், சந்தனமுல்லை அவர்களின் ‘நாங்களும் இந்திராநூயிக்களும்’.இன்னொன்று நானானி அம்மாவின் ‘அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்'.

இருவேறுபட்ட இடங்களில் நடக்கும் இருவேறு சம்பவங்கள். ஒன்று (சந்தனமுல்லை), குழந்தைகளுக்காக அன்பைப் பொழியும், தன் நேரத்தை வேலைக்கும் வீட்டிற்கும் (சில நேரங்களில் தன் சக்தியையும் மீறிப்) பங்கிடும் பெற்றோரின் பதிவு. இது உண்மைச் சம்பவம் என்பதுற்குச் சான்று தேவையில்லை.

இன்னொன்று குமுதம் இதழில் வெளிவந்து உண்மையில் சென்னையில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம்.நான் ஒரு குழந்தைக்குத் தாய், என்னும் வகையிலும் என் மனதைக் கலங்கடிக்கும் விஷயம். ஆனால் இது எவ்வளுவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இது நானானி அம்மாவின் பதிவைப் பற்றியது அல்ல. அவர்கள் நெஞ்சம் பதைபதைத்து, சற்றுக் கவனமாய் இருங்கள் என்ற பாசத்தில் எழுதிய பதிவே என்பது, அவரின் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது. நான் குமுதம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனவே இந்தக் கட்டுரை, நானானி அம்மாவின் பதிவின் வாயிலாய் என் கண்ணில் பட்டது. அவ்வளவு தொடர்பே என்னுடைய இந்தப் பதிவிற்கும் அவர்களின் பதிவிற்கும் என்று சொல்லிவிட்டு, மேலே தொடர்கிறேன்.

இப்பொழுது குமுதத்தின் கட்டுரைக்கு வருவோம் (நான் இன்னும் இந்தக் கட்டுரையை நேரடியாய்ப் படிக்கவில்லை.). (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இந்தக் கட்டுரை(உண்மையாய் இருக்கும் பட்சத்தில்) எதைப்பற்றியது? வேலை மும்முரத்தில் குழந்தையைக் கவனிக்கத் தவறிய ஒருவரின் பொறுப்பற்றத் தன்மையைச் சொல்வதா?

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளையை, வேலைப் பளுவிற்குப் பறிகொடுத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது, மக்களே சற்றுக் கவனியுங்கள் என்று இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து மக்களை நிதர்சனத்திற்குக் கொண்டு வரும் ஒன்றா?

சாஃப்ட்டுவேர் வேலையில் இருக்கும் பெற்றோரே! இது உங்களால்த் தான் நடக்கிறது, நீங்கள் பிடுங்கும் ஆணிகளிலாலேயே உங்களை அறைந்து கொள்ளுங்கள் என்று சொல்வதா?

எந்தப் பத்திரைக்கையிலும் வராத ஒன்று, எப்படிக் குமுதத்திற்கு மட்டும் தெரிந்தது?. நானானி அம்மாவின் பதிவில் ஒரு அனானியும் இதையேக் கேட்டு இருக்கின்றார். (சிகாகோ சம்பவம் எல்லாச் செய்தித்தொடர்பு சாதனங்களிலும் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.)

முதல் கேள்வி: இது ‘சென்னையில் நடந்தது’ என்று பரபரப்பிற்காக எழுதப் பட்ட ஒரு கட்டுரையா? ( (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இரண்டாவது கேள்வி: ஒரு பெண் வேலைக்குச் செல்வதால், குழந்தைதகள் கவனிக்கப்பட்டாமல், அரவணைப்பில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்ற நிலை வரும் எனில், இதற்கு வழிதான் என்ன?

1. பெண்ணைப் பொறுப்பற்றவள் என்று குற்றம் சொல்லலாம்.

2. பெண்கள் வேலைகுச் செல்லவில்லை என்று யார் அழுதார்கள் என்று கேட்டு, அவர்களை வீட்டில் இருக்கச் சொல்லலாம்.

3. பெண்ணை(தாயை)த் தவிர , பிள்ளைகளைக் குடும்பத்தில் வேறு யாராலும் பார்த்துக்கொள்ள இயலாது, அவள் தெய்வம் என்று சென்டிமெண்டாய் அடித்து, மேலே உள்ள இரண்டாவது பாயிண்டை, கடைசியில் உண்மை ஆக்கலாம்.

4. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்குத் துணையாய், மற்ற குடும்ப உறுப்பினர்களும், க்ரீச், பேபி சிட்டர் போன்ற அமைப்புகளும் ஒரு வழியாய் இருக்கலாம்.

5. தாய் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் சூழ்நிலையில், சில வருடங்கள் அவள் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளட்டும், குழந்தை வளர்ந்த பின் (3-5 வயது வரை), அவள் வேலைக்குச் செல்ல விரும்பினால், அதற்கானச் சூழ்நிலைகளிலும், ஊக்குவிப்புகளிலும் ஏற்பாடுகளிலும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெரும் துணையாய் நிற்கலாம்.

6. ________________________________________ - இது உங்கள் கருத்து. நடைமுறைக்கு ஒத்துவருவதாய், நீங்கள் நடைமுறையில் வெற்றிகண்ட ஒன்றாய், அல்லது உங்கள் மனதில் நியாயம் எனப்படுவதாய் உள்ள கருத்துகள்.

மூன்றாவது கேள்வி: சாஃப்ட்டுவேர் மக்களின் மேல் அப்படி என்ன காண்டு? பெரும்பாலான எதிர்மறைச் சம்பவங்கள், சில காலங்களாக அவர்கள் தலையில் விழுவது ஏன்?(உதாரணம் தரவில்லை. சாஃப்ட்வேர்காரர்கள் என்று வந்து, நீங்கள் படித்த செய்திகளை நினைத்துக் கொள்ளுங்கள்) அவர்கள் மென்பொருளாளர்கள் என்பதினால் இச்சம்பவம் நடக்கின்றதா? அல்லது அவர்கள் வேறு வேலை பார்த்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காதா?

சாஃப்ட்வேர் எனப்படும் தொழிலில் பல பிரிவுகள் உள்ளனவே:

1. மென்பொருளாளர்கள்
2. ஹார்டுவேர் இஞ்னியர்ஸ் (தமிழ்ப் பதம் தெரியவில்லை.சொன்னால் கற்றுக் கொள்வேன் நன்றி :-) )
3. நெட்வோர்க் எஞ்னியர்ஸ்
4. மேனேஜர்ஸ்
5. குவாலிட்டி கண்ட்ரோல்
6. எச். ஆர்.
7. மார்க்கட்டிங் இஞ்னியர்ஸ்

என்று இன்னும் பல பிரிவுகள். 'சாஃப்டுவேர் ஆளுகள்' என்று சொல்லும் போது இந்தப் பிரிவுகளில் யார் குறிவைக்கப்படுகிறார்கள்? (இதில் ஆணிபிடுங்குவது என்பது பெரும்பாலும் முதல் பிரிவின் கீழ் வரும்). இவர்கள் எல்லாருமா அல்லது ஒரு பிரிவினர் மட்டுமா?

ஒரு பிரிவினர் மட்டும் என்றால் , சம்பவத்திற்குக் காரணம் அவர்கள் செய்யும் தொழிலா?

அவர்கள் இந்த சாஃப்ட்வேர் வேலை பார்க்காமல்,(சமூகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக அறியப்பட்ட) பத்திரிக்கையாளராகவோ, பிசினஸ் மாக்னெட்டாகவோ, சினிமாத்துறை வல்லுனர்களாகவோ, டாக்டராகவோ, விண்வெளியாராகவோ அல்லது இன்னும் (பல),வீட்டை விட, வேலைக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டிய வேலையில் இருந்திருந்தால், அவர்களின் மேல் உள்ள இந்தக் கோபம் குறைந்திருக்குமா? அதாவது, இந்தக் கோபங்கள் தொழில் சார்ந்தவையா?

பி.கு.: வெகு நாட்களாக படித்த பல செய்திகளின் தாக்கமே இந்தப் பதிவு. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கேள்விகளாய்ப் பட்டால், அப்படி இருக்க வேண்டும் என்று இதை எழுதவில்லை.

மூன்று கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன? கேட்டாயிற்று. தனித் தனியாயும் எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி.

பி.கு.: தேதி: 27 ஜூலை 2008 :-
குமுதம் பத்திரிக்கையில் வந்தக் கட்டுரையை நான் நேரடியாகப் படிக்கவில்லை. குழந்தைகளுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று வந்ததாக நான் புரிந்து கொண்டது, ஒரு தவறு. அப்படி எதுவும் குமுதத்தில் வரவில்லை, பிள்ளைகள் செக்யூரிட்டியின் பாதுகாப்பில் 'விளையாடித்தான்' கொண்டிருந்தார்கள் என்று தான் வந்திருக்கின்றது; குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று பின்னூட்டதில் எனக்குத் தெளிவுபடுத்தப் பட்டுவிட்டது. என்வே என் முதல் கேள்வி செல்லாதது ஆகிவிட்டது. என் தவறுகளிலேயே மகிழ்ச்சியான தவறு இது. குழந்தைகள் நலமே :).

36 Comments:

பேரன்ட்ஸ் கிளப் said...

நீங்கள் சுட்டியிருக்கும் அந்த இரண்டு கட்டுரையையும் நான் இன்னும் படிக்க வில்லை.


நான் வேலைக்குப் போகலாமா?????
இந்தக் கேள்வி அவ்வப்போது என்னுள் தலை தூக்கியதுண்டு.

ஆனால் அதை அப்படியே தலையை தட்டி அமுக்கிவிடுவேன்.

இரண்டு குதிரையில் சவாரி செய்யும் திறமை!!??!! இருந்தால் வேலைக்குப்போகலாம்.


அன்புடன்

புதுகைத் தென்றல்


www.pudugaithendral.blogspot.com

ராஜ நடராஜன் said...

தற்போதுள்ள சூழல்களை பழையபடி புரட்டிப்போடும் சாத்தியங்கள் இனி இல்லை.மாற்றங்களின் வேகத்தில் பெண் வேலைக்குப்போயாக வேண்டிய சூழல்தான் அதிகம்.இதில் பிரச்சினை என்னவென்றால் வேலைக்குப் போய் வரும் ஆண் வீட்டுக்கு வந்தவுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வரம் பெற்றவன்.ஆனால் பெண்ணுக்கு அலுவல் முடிந்தும் வீட்டு அலுவல் அமுக்கி விடும் பரிதாபம்.

ராமலக்ஷ்மி said...

முதல் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் நானும் இன்னும் குமுதம் படிக்க வில்லை. பெங்களூரில் நாளைதான் கடைக்கு வரும்.

இரண்டாவது கேள்விக்கு தாங்களே 5 விதமாக யோசித்து விட்டீர்கள்.ஆறாவதை மற்றவர் கருத்துக்கு விட்டிருக்கிறீர்கள். வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டையும் குழந்தைகளையும் பார்த்து கொண்டு வாழ்க்கையை வெல் பேலன்ஸ்டாகக் கொண்டு செல்லும் பல தாய்மாரை அறிவேன்.[சில விதி விலக்குகள்தான் நாம் கேள்விப் படுவது].உடல்ரீதியாக பெண் என்பவள் பலவீனமாவள் என்பது இங்கு மட்டும் அடிபட்டு போய் விடுகிறது. வேலைவிட்டு வந்தாலும் வீட்டின் முழுப் பொறுப்பும் அவளுடையதாகத்தான் இருக்கிறது பெரும்பாலான இடங்களில். பொருளாதாரத் தேவை என்பதையும் தாண்டி தங்கள் திறமைகளை வெளிக் கொணரும் ஆர்வத்திலும் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்காகவும் மன அளவில் அளவிலா தெம்புடன் வேலைக்குச் செல்லுபவர் பலர்.

மூன்றாவது கேள்வி... நியாயமானதே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னமோ போங்க வண்டு ..இப்பல்லாம் கேள்வி கேப்பதையே விட்டாச்சே...இப்பப்போய் என் கிட்ட கேட்டுக்கிட்டு..
இவங்களேயே ஏன் குறை சொல்றாங்கன்னா..
வேறு எந்த துறையுமில்லாம இந்த துறைக்காரங்க கொஞ்சம் அதிகப்படியா வேலையேகதின்னு கிடப்பதா சொல்லிக்கறாங்க அதுனாலயா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

cheena (சீனா) said...

புது வண்டே !

வேலைக்குப் போகும் பெற்றோரின் மனநிலை தெரிந்தது தானே ! அவர்கள் படும் பாடு அப்பப்பா ? இது உண்மைச் சம்பவமாக இல்லாமல் இருந்தாலும் - இம்மாதிரி சம்பவம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

ம்ம் தவிர்க்க இயலாதவை.

செல்விஷங்கர் said...

வண்டே

பெண்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைக்காக சில காலம் வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். சென்றால் பொறுப்போடு பார்க்க உறவினர் ஒருவரைத் தான் நியமிக்க வேண்டும். தகுந்த காப்பக வசதி இருந்தால் விட்டுச் செல்லலாம்.
இடை இடையே பெற்றோர் ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பில் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளலாம். சாப்டுவேர் துறையல்ல - வேறு எந்தத் துறையாக இருந்தாலும் இது பொருந்தும்.

குமுதம் கட்டுரை கூறியது - சென்னையில் காருக்குள் குழந்தைகள் விளையாடிக் கொண்டு தான் இருந்ததாகத் தான் இருக்கிறது.

rapp said...

என்னைப்பொறுத்த வரைக்கும் க்ரீச், இல்லைனா பெற்றோர் உதவிய எதிர்பார்க்கலாம். ஏன்னா இப்பல்லாம் ஒரு சின்ன பிரேக் விழுந்தாலே அவங்களோட கேரியர் முக்காவாசி பாதிக்கப்படுகின்றது. இதுவே பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்கள் எனும்போது அவர்களோட அவசரத் தேவைகளுக்காவது அந்தத் தாய் வேலைக்குப் போக வேண்டி இருக்கு. இது பொருளாதாரத்தையும் அவங்கவங்க சூழலையும் பொருத்ததுன்னாலும், முடிவை அந்தப் பெண்ணே தனக்காக எடுக்கிற மாதிரி சூழ்நிலை இருக்கனுமேயன்றி, இன்னொருத்தர் அவங்க சார்பா எடுக்கக்கூடாது.

நானானி said...

புதுத்தேனீயே!
தவறாகப் புரிந்து கொண்டாய்.
குமுதம் இதழில், கார் பார்க்கிங்கில்
செக்யூரிட்டியின் பாதுகாப்பில் குழந்தையை சில மணிநேரம் விட்டுச் சென்ற தாயைப்பற்றித்தான் போட்டிருந்தது. அதைப் படித்ததும்
சிகாகோவிலிருந்த போது உறவினர் சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்ததால் மனதை பாதித்த அச்சம்பவத்தை எழுதினேன். எல்லோரும் அது சென்னையில்
நடந்ததாக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கவனக் குறைவு, அஜாக்கிரதையால்
நிகழ்ந்தது. வெளிவேலைகளையும்
வீட்டு வேலைகளையும் கணவன் மனைவி இருவரும் சமமாக பங்கிட்டுக் கொண்டால் சிரமம் குறையும். அதனால் வேலைக்கே
செல்லக்கூடாது என்பதல்ல.
செல்விசங்கரின் பதிலே ரீப்பீட்டு!!

rapp said...

இதுல ஆண்களை கம்பேர் பண்ண விரும்பலை, ஏன்னா பலத் தலைமுறைகளா தாயே குழந்தைகள பராமரிச்சதால இந்த உணர்வு குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டுக்காவது நம் உணர்வில் கலந்திருக்கும்.

rapp said...

மென்பொருள் துறையை சேர்ந்தவங்களை இப்படி ரவுண்டு கட்டி அடிக்கக் காரணம், அது பெருமளவில் வேலைவாய்ப்பை பலத் துறையினருக்கும் ஏற்படுத்தி, ரொம்ப தாழ்ந்த நிலையில் இருந்தவங்க ரெண்டு மூணு மாசத்தில் ஓரளவுக்காவது நல்ல நிலைமைக்கு வந்திடறாங்க, அதனால் பெரும்பான்மையான மற்றத் துறை மக்களோட பல வாழ்நாள் கனவுகளை மென்பொருள் ஆட்களான நாம் சில வருடங்களிலேயே பெரும்பாலும்(அனைவரும் அல்ல) அடைந்து விடுகிறோம், இது ஒரு காரணம் எனக் கருதுகிறேன். இதே போன்ற சூழல் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னாட்டு வங்கியில் வேலயிலிருப்போரைப் பற்றியும் நிலவி வந்தது. என் கசின் சிஸ்டர் அம்மாதிரி ஒரு வங்கியில் வேலைப்பார்த்ததால் பல மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை(அங்கு வேலை செய்யும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள், திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள் என இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை பெண்ணை பார்க்கும் முன்னரே கூறினார்)

NewBee said...

வாங்க புதுகைத் தென்றல்,

//ஆனால் அதை அப்படியே தலையை தட்டி அமுக்கிவிடுவேன்.
//

:-|. புரிகிறது.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

NewBee said...

//ராஜ நடராஜன் said... //

உண்மை. ஆனால், ஆதரவாய் இருக்கும் கணவர்களும் , அப்பாக்களும் இப்பொழுது உருவாகியிருக்கிறார்கள். விகிதாச்சாரம் இன்னும் இன்னும் அதிகம் ஆகும் என நம்புவோம். :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நடராஜன்.

NewBee said...

வாங்க ராமலக்ஷ்மி,

//மன அளவில் அளவிலா தெம்புடன் வேலைக்குச் செல்லுபவர் பலர்.
//

ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை ராமலக்ஷ்மி. :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

NewBee said...

வாங்க கயலக்கா,

நானும் கேட்காமல் தான் இருந்தேன், இரண்டு கேள்விகள் வரை. 3 ஆனவுடன், 4,5 வரை காத்திருக்கப் பொறுமையில்லாமல் போய்விட்டது. :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி கயலக்கா.

NewBee said...

வாங்க ராப்,

//ஏன்னா இப்பல்லாம் ஒரு சின்ன பிரேக் விழுந்தாலே அவங்களோட கேரியர் முக்காவாசி பாதிக்கப்படுகின்றது. //

உண்மை.அந்த 'முக்காவாசி' கோட்டை எழுத்தில் வரவேண்டிய ஒன்று.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க. :)

NewBee said...

நானானி அம்மா,

வாங்க, வாங்க.

முதலில் என் நன்றி. :)

//புதுத்தேனீயே!
தவறாகப் புரிந்து கொண்டாய்.
குமுதம் இதழில், கார் பார்க்கிங்கில்
செக்யூரிட்டியின் பாதுகாப்பில் குழந்தையை சில மணிநேரம் விட்டுச் சென்ற தாயைப்பற்றித்தான் போட்டிருந்தது.//

மிக்க மகிழ்ச்சி அம்மா. ஒரு நிமிடம் மனம் நின்றுவிட்டது. இது என் தவறுகளிலேயே மகிழ்ச்சியான ஒன்று.

செல்வி அம்மாவுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு நானும் போடுகிறேன். சரியாய், அளவாய், ஆணித்தரமாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் குடும்பத்தினர் உறுதுணையாய் இருத்தல் அவசியமே.

//வெளிவேலைகளையும்
வீட்டு வேலைகளையும் கணவன் மனைவி இருவரும் சமமாக பங்கிட்டுக் கொண்டால் சிரமம் குறையும்//

பங்கிட்டால் நன்மையே.

வருகைக்கும் கருத்திற்கும் மிக மிக நன்றி அம்மா. :)

நந்து f/o நிலா said...

http://parentsclub08.blogspot.com/2008/01/blog-post_25.html

இந்த போஸ்ட் படிங்க newbee. இதே சப்ஜக்ட கொஞ்சம் முன்னாடியே அலசி இருக்கோம்.

அங்கே போட்ட கமெண்ட் இங்கேயும் கொஞ்சம் பொருந்தி வரலாம்.

//அம்மாவிற்கு பதில் அப்பா பார்ட் டைம் வேலை பார்த்தால் என்ன, ஏன் குழந்தை அம்மாவிடம் மட்டும் தான் வளரவேண்டுமா//

இம்சை, குழந்தைக்கு அம்மாவிடம் கிடைக்கும் செக்யூரிட்டி ஃபீலிங் அப்பாவிடம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

என் பொண்ணு என்மேல எவ்வளவு பிரியமா இருந்தாலும் தூக்கத்துல அவ அம்மாகிட்டத்தான் போய் படுக்கறா.

என்ன பாசத்தை கொட்டினாலும் அம்மாவோட அருகாமையையும் அது தரும் பாதுகாப்பு உணர்வையும் அப்பாவால் தரவே முடியாது.

வேலைக்கு குழந்தையை விட்டுவிட்டு போவது என்றால் அது வேறு.

ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.

குழந்தையின் எதிர்காலத்துக்கு சம்பாதிக்க வேண்டுமென்றால், இப்போ குழந்தையுடனே இருக்க முடியாமல் போவது அதற்கு விலை.

விலை என்ன என்பதையும் அது நமக்கு கட்டுபடியாகுமா என்பதையும் நிர்னயம் செய்வதும் நாம்தான்.

நிலா வயிற்றில் வளர்வதிலிருந்து இப்போது வரை அவள் அருகாமையில் இருக்க நான் கொடுத்த விலை அதிகம் என்பது என் நன்பர்கள் உறவினர்கள் கருத்து.என்னுடைய வியாபார நடவடிக்கையிலிருந்து நிறய மாறிவிட்டேன்தான்.

ஆனால் நான் கொடுத்த விலை ரொம்பவே அற்பம் என்றுதான் இன்று வரை நினைக்கிறேன்.

நந்து f/o நிலா said...

நல்ல பொருளாதார நிலமை, கேரியர் என்பதையெல்லாம் காலம் ஈசியாக புரட்டிப் போட்டுவிடும். தவிர பாதுகாப்பான பொருளாதார நிலமை என்று ஒன்று எப்போதும் இல்லை.

இன்றைக்கு வாழும் வாழ்க்கைதான் சாசுவதம்.நாம் குழந்தையின் கூடவே இருப்பது குழந்தையின் குணநலன்,வருங்காலம் இவைகளுக்கு நல்லது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

குழந்தையின் கூடவே இருந்து அதன் ஒவ்வொரு செய்கையிலும் பங்கெடுத்து,ரசித்து.....

இது நமக்கு கையில் கிடைத்த சொர்க்கம் இல்லையா? கையில் இருக்கும் சொர்க்கத்தை விட்டுவிட்டு எந்த சொர்க்கத்தை நோக்கமாக கொண்டு பறந்து பறந்து உழைக்கிறோம்?

என்னமோ போங்க.

கயல்விழி said...

நீங்க வேலைக்கு போகலாமா என்ற கேள்விக்கு பதில் -- தாராளமா போகலாம்.

விபத்துகள் தாய் வேலை செய்தால் தான் நடக்கவேண்டும் என்பதில்லை, வேலை செய்யாமல் வீட்டில் இருக்கும் போதும் குழந்தைகளுக்கு விபத்து நேரலாம். இதற்கு எடுத்துக்காட்டாக பல செய்திகள் உண்டு.

பெண் ஒரு தெய்வம், அன்பின் சிகரம், தியாகத்தின் உருவம் என்றெல்லாம் புகழ்ந்து புகழ்ந்தே காலையில் இருந்து மாலை வரை வீட்டு வேலை செய்ய வைத்துவிட்டு பிறகு "வீட்ல சும்மா தானே இருக்கே" என்ற சாதாரண கேள்வி கேட்டுவிடுவார்கள்.

மென்பொருள் துறையில் கடந்த மூன்று வருடமாக வேலை செய்து வருகிறேன். இருந்தாலும் சென்ற வாரம் கூட ஒரு சாப்ஃட்வேர் அப்டேட் வகுப்புக்கு சென்று வந்து. குறுகிய காலத்தில் மாறிக்கொண்டே இருக்கும் மென்பொருள் துறையில், கொஞ்ச காலம் டச் விட்டு போனதென்றாலும் கேரியருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இதற்கா இத்தனை கஷ்டப்பட்டு படித்தோம்?

சில பெண்களுக்கு வீட்டில் இருப்பது பிடிக்கும், அவர்கள் தாராளமாக வீட்டில் இருக்கட்டும், சில பெண்களுக்கு வெளியே சென்று வேலை பார்த்தல் பிடிக்கும். மகிழ்ச்சியான அம்மா தான் நல்ல அம்மாவாக இருக்க முடியும். எனவே நமக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதை செய்யும் உரிமை இருக்க வேண்டும். All women should have the right to make her own decisions, no matter what it is.

வல்லிசிம்ஹன் said...

புது வண்டே, பொதுவாக எல்லா இளைய தலைமுறைப் பெற்றோரிடம் காணப்படுவது ஒரு நிதானமில்லாத வாழ்க்கை. அவசரம்,அவசரம் மேலும் அவசரம்.
சம்பாதிக்கப் போகலாம் வேண்டும் அந்தப் பணம் எதிர்காலத்திற்கு என்று தான் நினைக்கிறார்கள். தேவைகளைச் சுருக்க மனமில்லை. ஆடம்ப் அரம் என்பதை விடக் கல்வி,மற்றும் உடைகள் எல்லாமே விலையேறி ஒரு சங்கடமான சூழ்னிலை.

இப்போ நம்ம ஊரில வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் அவதி நிறைய ருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொள்ள யாராவது இருப்பார்கள்.அதையும் மீறிக் கையைக் காலை உடைத்துக் கொள்வதும் உண்டு.

இதெல்லாம் சமூக மாற்றம்,பொருளாதாரத்தைப் பொறுத்து அமைகிறது.

சகல கலா வல்லியாக இருக்கத் தெரிந்தால்,பொறுப்பான அம்மாவாக ,நீங்கள் வேலைக்குப் போகலாம்.அப்பாவும் தாயுமானவனாக இருக்கக் கத்துக்கணும்.

மங்களூர் சிவா said...

/
நந்து f/o நிலா said...

நல்ல பொருளாதார நிலமை, கேரியர் என்பதையெல்லாம் காலம் ஈசியாக புரட்டிப் போட்டுவிடும். தவிர பாதுகாப்பான பொருளாதார நிலமை என்று ஒன்று எப்போதும் இல்லை.

இன்றைக்கு வாழும் வாழ்க்கைதான் சாசுவதம்.நாம் குழந்தையின் கூடவே இருப்பது குழந்தையின் குணநலன்,வருங்காலம் இவைகளுக்கு நல்லது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

குழந்தையின் கூடவே இருந்து அதன் ஒவ்வொரு செய்கையிலும் பங்கெடுத்து,ரசித்து.....

இது நமக்கு கையில் கிடைத்த சொர்க்கம் இல்லையா? கையில் இருக்கும் சொர்க்கத்தை விட்டுவிட்டு எந்த சொர்க்கத்தை நோக்கமாக கொண்டு பறந்து பறந்து உழைக்கிறோம்?

என்னமோ போங்க.
/

நந்து அண்ணா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

@கயல்விழி
/
மென்பொருள் துறையில், கொஞ்ச காலம் டச் விட்டு போனதென்றாலும் கேரியருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இதற்கா இத்தனை கஷ்டப்பட்டு படித்தோம்?
/

தேவைக்காக வேலையா? விருப்பத்துக்காக வேலையா?
படிச்சிட்டோம் அப்படிங்கறதுக்காக வேலையா?

நந்துவின் பின்னூட்டங்களை பார்க்கவும்.

வல்லிசிம்ஹன் said...

பிரமாதமான பின்னூட்டம்,கருத்து நிலா அப்பா.வாழ்த்துகள்.

NewBee said...

rapp said...
//இதுல ஆண்களை கம்பேர் பண்ண விரும்பலை, ஏன்னா பலத் தலைமுறைகளா தாயே குழந்தைகள பராமரிச்சதால இந்த உணர்வு குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டுக்காவது நம் உணர்வில் கலந்திருக்கும்.
//

உண்மை. ஆனால் ராப், இப்பொழுது ஆதரவாய், ப்ராக்டிக்கலாய் இருக்கும் ,யோசிக்கும் (குழந்தையின்) அப்பாக்களும் கணவ்ர்களும் வந்துகொண்டு இருக்கிறார்கள். கண்முன்னால் பார்த்திருக்கிறேன். விகிதாச்சாரம் இன்னும் கூட நீங்கள் சொல்வது போல் காலதாமதம் ஆகும் தான். :))

NewBee said...

மென்பொருள் புதிதாய் விசுவரூபம் எடுத்துக்கொண்டு இருக்கும் துறை. எந்த ஒரு புதிய விஷயமும், என்ன ஏது என்பதற்குள் பல திசைகளில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கும்.

//ராப்.....

ரெண்டு மூணு மாசத்தில் ஓரளவுக்காவது நல்ல நிலைமைக்கு வந்திடறாங்க, அதனால் பெரும்பான்மையான மற்றத் துறை மக்களோட பல வாழ்நாள் கனவுகளை மென்பொருள் ஆட்களான நாம் சில வருடங்களிலேயே பெரும்பாலும்(அனைவரும் அல்ல) அடைந்து விடுகிறோம், இது ஒரு காரணம் எனக் கருதுகிறேன். //

இதுவும் ஒரு காரணமோ என்ற சந்தேகம் எனக்கும் இருக்கின்றது ராப். ஆனால் மென்பொருள் துறை அல்லாதவ்ர்களையும் நேரடியாக் கேட்டால் உண்மையில் என்ன மேட்டர் என்று தெரியும் என்று தோன்றியது. அதனால் வேறு காரணங்குளும் இருக்குமா என்றும், சாஃப்ட்வேர் என்றதும் என்ன தோன்றுதிறது எல்லாருக்கும், என்பதையும் அறியவே நேரடியாகவே இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

கயலக்கா , 'அதிக நேரம் வேலையில்' என்று ஒரு கருத்துக் கூறியிருக்கிறார். மேலும் காத்திருப்போம், எல்லார் பார்வைகளுக்கும் :).

நன்றி ராப். தொடர்ந்து பார்ப்போம். :)

NewBee said...

நந்து,

வாங்க. நலமா? நிலா நலமா? :)

வருகைகும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி :)

//விலை என்ன என்பதையும் அது நமக்கு கட்டுபடியாகுமா என்பதையும் நிர்னயம் செய்வதும் நாம்தான்.
//

இது! இது தான் அப்ப அதிகக் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்று. ஒரு முறை வேலைக்குப் போக வேண்டாம், கட்டுபடியாகாது என்று முடிவு செய்தபின், 4 மாதம் கழித்து, என் மனம் எனும் குரங்கு, என்னையே சுயமதிப்பீடு செய்கிறது. ஆஆஆஆஅயாசாமாக இருக்கும். என்ன productivity நம்மால்? என்று.

அப்புறம், நல்லவேளை இன்று வீட்டில் இருந்தோம், பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லாத போது நான் கூட இருந்தேன் என்று மகிச்சியாய்த் துள்ளிக் குதிக்கும் அதே குரங்கு.

நான் வெறும் மனுஷி. ஒரு முடிவு எடுத்தால் , அது ஐ.நா. போட்ட ஒப்பந்தமோ இரு நாடுகளின் எல்லைக் கோடோ அல்ல, அப்படியே மாறாமல் கடைபிடிக்க.

இங்கே தான், பெற்றோரைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களின் துணை தேவை என்றும், 5 வயது வரை பேரேக் எடுத்து (அவ்வளவு எளிதல்ல என்ற போதும்)மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என்றும் சொன்னேன்.

கயல்விழி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள் 'மகிழ்ச்சியான அம்மா தான் நல்ல அம்மாவாக இருக்க முடியும்' என்று. அது உண்மையில்லையா ????

NewBee said...

வாங்க கயல்விழி,

நலமா? :)

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஒவ்வொரு பத்தியும் தெளிவாய், நடமுறையில் ஒத்துவரும்படியாய்க் கூறியுள்ளீர்கள். :). தெளிவான சிந்தனை. வாழ்த்துகள்!

காலம் மாற மாற, பொறுப்புகளும் சூழ்நிலைகளும் மாறும். அப்போது இந்தத் தெளிவு நமக்குப்பெரிய பலம்.

//குறுகிய காலத்தில் மாறிக்கொண்டே இருக்கும் மென்பொருள் துறையில், கொஞ்ச காலம் டச் விட்டு போனதென்றாலும் கேரியருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இதற்கா இத்தனை கஷ்டப்பட்டு படித்தோம்?//

உண்மை. எனக்குக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை (அட! பழமொழிங்க.மீசையா? என்று எல்லாம் கேட்கக் கூடாது :)).

என்ன செய்ய முட்டி மோத வேண்டியது தான். சீனியாரிட்டியைக் காம்ப்ரமைஸ் செய்யச் சொல்லி மனதிற்கு சொல்லிக்கொடுக்கத் தான் வேண்டியிருக்கிறது. :))

சும்மா இருப்பதற்கு மீண்டும் வேலைக்குச் சென்று சீனியாரிட்டிக் கவுண்டரை ஆரம்ப்பிப்பது மேல். மனக்குரங்காவது சும்மா இருக்குமே.

NewBee said...

வல்லிம்மா,

வாங்க, வாங்க :-). நலமா? :)

//சகல கலா வல்லியாக இருக்கத் தெரிந்தால்,பொறுப்பான அம்மாவாக ,நீங்கள் வேலைக்குப் போகலாம்.அப்பாவும் தாயுமானவனாக இருக்கக் கத்துக்கணும்.//

அது! சகல கலா வல்லியும்(அம்மா),சகல கலா வல்லனும்(அப்பா) கொஞ்சம் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும்
சேர்த்துக் கொண்டால் எல்லாம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.

மூளைக்குத் தெரிவது, pressurised situation-l டமால் ஆகிவிடுகிறதே
:(

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அம்மா :))

கயல்விழி said...

//தேவைக்காக வேலையா? விருப்பத்துக்காக வேலையா?
படிச்சிட்டோம் அப்படிங்கறதுக்காக வேலையா?

நந்துவின் பின்னூட்டங்களை பார்க்கவும்.//

மங்களூர் சிவா,

நந்துவின் கருத்துக்களை படித்த பிறகு தான் என் கருத்துக்களை எழுதினேன். அவரை கோட் பண்ணானததுக்கு காரணம், நான் எழுதியது மாற்றுக்கருத்துக்களே தவிர எதிர்க்கருத்துக்கள் அல்ல. அதனால் தான்.

தேவைக்காக இல்லாவிட்டாலும் பல பெண்கள் வேலை செய்வது எங்களுடைய விருப்பத்துக்கே. It makes us happy and accomplished.

NewBee said...

வாங்க சிவா வாங்க :),

நலமா? :))

ஆமாம்!நந்து அவர்கள், வெரும் வார்த்தையாய் இல்லாமல்,உணர்ந்து உண்மையாய்ச் சொல்லியிருக்கிறார்.

வல்லியம்மா சொல்லும் தாயுமானவர் இங்கு எட்டிப்பார்க்கிறாரா? :))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

கயல்விழி said...

//நான் வெறும் மனுஷி. ஒரு முடிவு எடுத்தால் , அது ஐ.நா. போட்ட ஒப்பந்தமோ இரு நாடுகளின் எல்லைக் கோடோ அல்ல, அப்படியே மாறாமல் கடைபிடிக்க.

இங்கே தான், பெற்றோரைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களின் துணை தேவை என்றும், 5 வயது வரை பேரேக் எடுத்து (அவ்வளவு எளிதல்ல என்ற போதும்)மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என்றும் சொன்னேன்.//

Newbie

உங்களுடைய மேற்கண்ட கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தது.
இது உங்களுக்காக என்றால், குடும்ப உறுப்பினர்கள் யாராவது உதவிக்கு வர முடியுமா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நீங்கள் கேமராவில் கண்காணிக்கும் வசதியுள்ள டேகேர்கள் உண்டு, அதை பற்றி விசாரிக்கலாம், அல்லது பார்ட் டைம் வேலை, ரிமோட் லொகேஷனில் இருந்து வேலை செய்வது சில ஆப்ஷ்ன்கள்.

குழந்தைக்காக அம்மாவே தன் கேரியரை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மட்டும் என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. இருந்தாலும் என் கருத்தோ மற்றவர்களின் கருத்தோ இங்கே முக்கியமில்லை. உங்கள் கருத்து, உங்கள் மகிழ்ச்சியே முக்கியமானது.

நான் முன்பே எழுதியது போல, "A happy mother is a good mother" என்பதில் மாற்றமில்லை. வீட்டில் இருந்தவர்களின் குழந்தைகள் நல்லவர்களாக வளர்ந்ததாகவும், வேலைக்கு செல்பவர்களின் குழந்தைகள் சீரழிந்ததாகவும் எந்த புள்ளி விவரமும் இல்லை(I am talking about authorized ones by child psychologists).

உங்களுக்கு எது மகிழ்ச்சியைத்தருகிறதோ, எது சரியெனப்படுகிறதோ அதை செய்யவும்.

மங்களூர் சிவா said...

/
கயல்விழி said...

மங்களூர் சிவா,

நந்துவின் கருத்துக்களை படித்த பிறகு தான் என் கருத்துக்களை எழுதினேன். அவரை கோட் பண்ணானததுக்கு காரணம், நான் எழுதியது மாற்றுக்கருத்துக்களே தவிர எதிர்க்கருத்துக்கள் அல்ல. அதனால் தான்.

தேவைக்காக இல்லாவிட்டாலும் பல பெண்கள் வேலை செய்வது எங்களுடைய விருப்பத்துக்கே. It makes us happy and accomplished.
/

கயல்விழி ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற முடியும். திருமணம் என்று வரும்போதே நாம் நம் சுயத்தை இழந்துவிடுகிறோம்.

/
/
மென்பொருள் துறையில், கொஞ்ச காலம் டச் விட்டு போனதென்றாலும் கேரியருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இதற்கா இத்தனை கஷ்டப்பட்டு படித்தோம்?
//

நீங்கள் இப்படி குறிப்பிட்டிருந்ததால்தான் தேவைக்காக வேலையா? விருப்பத்துக்காக வேலையா? படிச்சிட்டோம் அப்படிங்கறதுக்காக வேலையா? என கேட்டேன்.

தேவைக்காக வேலை என்றால் பரவாயில்லை , படித்திருக்கிறேன் அதனால் வேலைக்கு போவேன் என்பதும் விருப்பத்திற்காக போவதும் எந்த அளவிற்கு சரி என்பது அவரவருக்கு விட்டது.

/
All women should have the right to make her own decisions, no matter what it is.
/

ஆண்களுக்கும் அதேதானே!?

இருவரும் இப்படி நான் செய்வது சரி என நினைத்தால்,

உடல் சந்தோசத்திற்காக ஆக்சிடெண்ட்டலாக!?!? பிள்ளைகளை பெற்றுக்கொண்டு அதை சரியாக கவனித்து வளர்க்காமல் வேலை பார்த்து சாதித்து என்ன எடுத்துக்கொண்டு போகப்போகிறோம் மேலே போகும்போது!?

There is no secured future. Life is uncertain.

நல்ல பொருளாதார நிலமை, கேரியர் என்பதையெல்லாம் காலம் ஈசியாக புரட்டிப் போட்டுவிடும்.

NewBee said...

வாங்க கயல்விழி,

நலமா? :)

மறுபடி சந்திப்பதில் மகிழ்ச்சி.

//உங்களுடைய மேற்கண்ட கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தது.
இது உங்களுக்காக என்றால், குடும்ப உறுப்பினர்கள் யாராவது உதவிக்கு வர முடியுமா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நீங்கள் கேமராவில் கண்காணிக்கும் வசதியுள்ள டேகேர்கள் உண்டு, அதை பற்றி விசாரிக்கலாம், அல்லது பார்ட் டைம் வேலை, ரிமோட் லொகேஷனில் இருந்து வேலை செய்வது சில ஆப்ஷ்ன்கள்.
//

மிக்க நன்றி கயல்விழி. இவை எல்லாம் explore செய்துகொண்டிருக்கிறேன். Luckily, மூன்றுமே எனக்குக் கைகொடுக்கும் என நம்புகிறேன்:-தாயுமானவர்,மற்ற குடும்ப உறுப்பினர், பேபி சிட்டர்.:)

எல்லாம் பொருந்தி, கைகூடி வர இன்னும் நேரம் இருக்கிறது. :)).

Thank u for ur immeadiate reply and concern. Nice of you :)

எல்லாப் பெண்களுக்கும் இது சாத்தியமா?, எல்லாருக்கும் இது கைகூடுமா?, எல்லாருக்கும் இந்தக் குழப்பங்கள், பிரஷர் உண்டு தானே, குடும்பம் எவ்வளவு தூரம் உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கிறது அல்லது எவ்வளவு தூரம் குடும்பம் , இது வேலைக்குச் செல்லும் பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனை என்று ஒதுங்கி நிற்கிறது என்பதை அறியவே, என்னுடைய உண்மை மன நிலையையே உதாரணம் காட்டினேன்.

கயல்விழி said...

//கயல்விழி ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற முடியும். திருமணம் என்று வரும்போதே நாம் நம் சுயத்தை இழந்துவிடுகிறோம்.//

மங்களூர் சிவா,

சுயத்தை இழக்காமலும் திருமண வாழ்வில் இருக்கலாம்/இருக்கிறார்கள்.
//ஆண்களுக்கும் அதேதானே!?
//

ஆமாம், ஆண்களுக்கும் அப்படியே.
'women' என்று குறிப்பிட்ட போது 'men' என்று நான் குறிப்பிடாததுக்கு காரணம், மற்ற நாடுகள் போல் இல்லாமல், குழந்தை வளர்ப்பு என்பது இந்திய சமுதாயத்தில் முழுக்க முழுக்க பெண்ணின் கடமையாக கருதப்படுகிறது. 'அவனுக்கு' குழந்தை வளர்ப்பில் தன் கேரியரை தியாகம் செய்யும் கட்டாயம் இல்லை, ஆனால் 'அவளுக்கு' இருக்கிறது. எனவே சிலவற்றைப்பற்றி குறிப்பிடும் போது ஜெண்டர் ந்யூட்ரலாக குறிப்பிடுவதில்லை.

அமரிக்கா போன்ற நாடுகளில் "we are pregnant" என்று குற்ப்பிடும் பழக்கம் இருக்கிறது, நம் வழக்கம் இன்றளவும் "My wife is pregnant" என்ற வகையிலேயே இருக்கிறது. மாற்றம் வருகிறது, ஆனால் மெதுவாக வருகிறது.

//உடல் சந்தோசத்திற்காக ஆக்சிடெண்ட்டலாக!?!? பிள்ளைகளை பெற்றுக்கொண்டு அதை சரியாக கவனித்து வளர்க்காமல் வேலை பார்த்து சாதித்து ?//

படித்தவர்களின் பெரும்பான்மையினர் நீங்கள் மேற் சொல்லிய காரணத்துக்குக்காக குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை. வேண்டும் என விருப்பப்பட்டே குழந்தைகளை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் காரணத்துக்காக திருமணம் வேண்டுமானால் பண்ணிக்கொள்ளலாம். அப்படியே மேற்குறிப்பிட்ட காரணத்தினால் குழந்தைகள் பிறந்தாலும் அவர்களும் குழந்தைகளே, அவர்களுக்கும் அதே அன்பும், ஆதரவும் தேவைப்படும், அதை அளிப்பதும் பெற்றோரின் கடமையாகிறது.

'சரியாக கவனிப்பது' வேலைக்கு செல்லும் தாயாலும் முடியும். குழந்தையிடம் செலவிடும் நேரத்தின் quality முக்கியமே தவிர quantity முக்கியமில்லை.

//என்ன எடுத்துக்கொண்டு போகப்போகிறோம் மேலே போகும்போது!//

நல்ல தாயாகவும், நல்ல பணியாளராகவும் இருந்து, வீட்டுக்கும் சமுதாயத்துக்கு ஏதோ நம்மால் முடிந்ததை செய்தோம் என்ற மனநிறைவை!

கயல்விழி said...

//Thank u for ur immeadiate reply and concern. Nice of you :)

எல்லாப் பெண்களுக்கும் இது சாத்தியமா?, எல்லாருக்கும் இது கைகூடுமா?, எல்லாருக்கும் இந்தக் குழப்பங்கள், பிரஷர் உண்டு தானே, குடும்பம் எவ்வளவு தூரம் உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கிறது அல்லது எவ்வளவு தூரம் குடும்பம் , இது வேலைக்குச் செல்லும் பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனை என்று ஒதுங்கி நிற்கிறது என்பதை அறியவே, என்னுடைய உண்மை மன நிலையையே உதாரணம் காட்டினேன்.//

You are very welcome Newbee. :)


நம்முடைய இந்திய சமுதாயத்தில் ஒரு மோசமான பழக்கம் உண்டு. அதாவது ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவுகளுக்கு மற்ற பெண்களே ஆதரவு கொடுப்பதில்லை. நாம்(பெண்களின்) வளர்ச்சி குறைவாகவே இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

ஒரு ஆண் குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்வதையோ, ஒரு குறிப்பிட்ட வேலை/குறிப்பிட்ட நேரத்தில் செய்வதையோ அல்லது பெண் சம்மந்தமான உறவுகள்/தொடர்புகளையோ மற்ற ஆண்கள் விமர்சித்து பார்த்திருப்போமா? ஆனால் பெண்கள் இப்படி செய்தால் முதலில் பெண்களே கடுமையாக விமர்சிப்பார்கள்.
இதுவே இந்திய பெண்ணின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகிறது.

இப்படி செய்யாமல் சக பெண்ணின் முன்னேற்றத்துக்கும்/முடிவுகளுக்கும் ஆதரவளிப்பது என்று சில தோழிகள் சேர்ந்து முடிவெடுத்தோம். முடியும்போதெல்லாம் தொடர்ந்து செய்தும் வருகிறோம்.

கயல்விழி said...

நீங்கள் இதில் என்ன முடிவெடுத்தாலும் என்னுடைய முழு ஆதரவு உண்டு. :)

blogger templates 3 columns | Make Money Online